எங்களைப் பற்றி | தொடர்புகளிற்கு சாம்பலிலிருந்து எழும் பீனிக்ஸ் பறவையாக இருக்கிறம் மீண்டும் பறக்கத் தொடங்கியிருக்கிறது. கடந்த நான்கு வருடங்களில் சஞ்சிகையை மாதமிருமுறை வெளியிடுவதில் ஏற்பட்ட தாமதங்கள், பொருளாதாரத் தடைகள் என பல பிரச்சனைகளுக்கு முகங்கொடுத்து பகீரத பிரயத்தனத்திற்கு மத்தியில் இருக்கிறம் வெளிவந்துகொண்டிருந்ததை யாவரும் அறிவர். அதிகரித்து வரும் செலவீனங்கள், விநியோகத்திலுள்ள ஆட்பல பற்றாக்குறை, சந்தைப்படுத்தலிலுள்ள குறைபாடுகள் என பல்வேறு நெருக்கடிகளுக்குள் இருக்கிறம் சிக்கித் திணறத்தொடங்கியதால் ஜனவரி மாதம் 64 ஆவது இதழுடன் தனது பயணத்தை தற்காலிகமாக இடைநிறுத்தியிருந்தது. எனினும் இச்சஞ்சிகைக்காக இரவுபகல் கண்விழித்து அயராது பாடுபட்டுவரும் துடிப்புமிக்க இதழியல் துறைசார்ந்த இளைஞர் குழுவினருடன் பணியாற்றும் துணிச்சல் மிக்க பத்திரிகையாளர்களும் எழுத்தாளர்களும் மீண்டும் இருக்கிறம் சஞ்சிகையை கொண்டுவர பல முயற்சிகளையும் மேற்கொண்டனர். மனதில் துணிவும், நம்பிக்கையும், ஆதரவளிக்கும் வாசகர்களும் இருக்கிறமுடன் கூடவே இருந்ததால் மீண்டும் இருக்கிறம் தனது பயணத்தை வார இதழாக ஆரம்பித்து இருக்கிறது. இலங்கையைப் பொறுத்தவரையில் தமிழ்ச் சஞ்சிகை ஒன்றை ஆரம்பித்து தொடர்ந்து நடத்துவது என்பது எந்தளவுக்கு சவாலானது என்பது அனைவருக்கும் தெரியும். குறிப்பாக தமிழகத்திலிருந்து வெளிவரக் கூடிய சஞ்சிகைகளின் போட்டியைச் சமாளிக்க வேண்டும். அந்தளவு தூரத்திற்கு அதற்கான விடயப்பரப்போ, அச்சுத் தரமோ, வாசகர்களின் ஆதரவோ இலங்கையில் இல்லை. அதனால்தான் இலங்கையைப் பொறுத்தவரையில் நின்று போன சஞ்சிகைகளின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. பற்றி எரியும் அன்றாடப் பிரச்சினைகள், தமிழ், முஸ்லிம், மலையக மக்களின் வாழ்வைப் புரட்டிப்போட்டு நிற்கும் சிக்கல்கள் போன்றவற்றையே பெரும்பாலும் உள்ளடக்கங்களின் பிரதான கருப்பொருளாகக் கொண்டு ~இருக்கிறம்’ வெளியாவதால் அது தமிழ் பேசும் மக்களின் உயிர்த்துடிப்பின் பிரதிபலிப்பாக நிற்கின்றது என்பது வெள்ளிடைமலை. ஏனைய சஞ்சிகைகள் இலக்கியத்தை முதற் பொருளாகப் பேச, ‘இருக்கிறம்| வெகுசன வாசிப்புக்குத் தீனிபோடும் பல்துறை சார்ந்த இதழாகத் தன்னை அடையாளப்படுத்தி நிற்கிறது. இலக்கியத் தரப்பை மட்டுமல்லாமல், சகலரையும் வாசிக்க வைக்கவேண்டுமென்பதே இதன் நோக்கம். ஆரோக்கியமான வாசிப்பு அனுபவத்தைத் தருவதுதான் ‘இருக்கிறம்’ பெற்றுள்ள வெற்றிக்குப் பிரதான காரணம். இவற்றுக்கும் மேலாக சமூக அவலங்களை பிரதேச மண்வாசனையோடு நகைச்சுவையாகத் தருவதில் ‘இருக்கிறம்’ ஒரு தனித்துவத்தைப் பெற்றிருக்கின்றது. கருத்தைக் கவரும் லாவகமான எழுத்து நடை, காத்திரமான கட்டுரைகள், நேர்த்தியான அச்சு, ஒழுங்கமைப்பான பக்க வடிவமைப்பு, கவர்ச்சியான கட்டமைப்பு, வண்ணப் பிரதிபலிப்பு, இதுவே “இருக்கிறம்”. அதென்ன “இருக்கிறம்” என்று இன்றும் பலர் கேள்வியெழுப்புகின்றனர். யுத்த அழிவுகளில் சிக்கி, ஆக்கிரமிப்பு, அழுத்தங்களில் துவண்டு, வாழ்வியல் சோகங்களில் மூழ்கி நலிவுற்றிருக்கும் எமது தமிழ்பேசும் மக்களையோ அல்லது புலம்பெயர் தமிழர்களையோ பார்த்து “எப்படி இருக்கிறீர்கள்?” என்று கேட்டால் “இருக்கிறம்” என விரக்தியாகப் பதில் சொல்வார்கள். ஆனால் நாங்களும் “இருக்கிறம்” என்ற அடையாளத்தோடு உயிர்த்துடிப்புள்ள சஞ்சிகையாக இருக்கிறம் நான்கு ஆண்டுகளாக வெளிவந்துகொண்டிருக்கிறது. ‘ஏதோ இருக்கிறம்’, ‘எப்படியோ இருக்கிறம்’, ‘சும்மா இருக்கிறம்’, என்பவர்களுக்கிடையில் ‘இருக்கின்றவர்களுக்காய் இருக்கிறம்’ என்ற தற்துணிவுடன் இருக்கிறம் வெளிவந்து கொண்டிருக்கின்றது. உலகில் வெளிவந்து கொண்டிருக்கும் சஞ்சிகைகளோ நூல்களோ பெயர்ச்சொல்லில்தான் தமக்குரிய பெயரை அடையாளப்படுத்துகின்றன. ஆனால் ஈழத்தமிழர்களின் வாழ்வியலை வெளிக்காட்டுவதற்காய் வினைச்சொல்லிலே இருக்கிறம் தனது பெயரை வகுத்துக் கொண்டது. ஏனெனில் இன்று நாமெல்லாம் வினைகளாகத்தானே இருக்கிறோம். இருக்கிறமின் மகுட வாக்கியம் “ஒரு பொல்லாப்பும் இல்லை” என்ற யோகர் சுவாமிகளின் கூற்று. ‘ஒரு பொல்லாப்புமில்லை, எப்பவோ முடிந்த காரியம்..” என்றார் அந்த தேரடிச் சித்தர். உண்மைதான் ‘ஒரு பொல்லாப்பும் இல்லை| என்பதோடு, ‘இருக்கிறம்| தனது செயற்பாடுகளை வரையறுத்துக் கொள்ளாது எமது எதிர்காலம் குறித்து அறிவார்ந்த ஆய்வு முறைகளுக்கும் இடம் தருகின்றது. ஈழத்தமிழ்ச் சமூகம் தனது கலைந்து போன கனவுகளை நனவாக்குவதற்கு இந்த அணுகுமுறை அவசியமானதால் அதை நோக்கிய இருக்கிறமின் பயணம் மிகவும் துணிச்சலானது. ‘இருக்கிறம்’ என்ற சின்னத்தில் இரண்டு காகங்கள் ஏன் எதிரும்புதிருமாக ஒன்றையொன்று பார்த்தவண்ணம் உட்கார்ந்திருக்கின்றன? காகத்தை விட வேறு பறவைகள் சின்னங்களாக இல்லையா? என்று நீங்கள் கேட்கலாம். எங்களுடைய நாட்டில் காகம்தான் எங்கும் காணப்படும் பறவை. சாதாரண பொது சனங்களை அது அடையாளப்படுத்துகிறது. காகம் எமது வாழ்வியலுடன் நெருங்கிய தொடர்புபட்டது. ஒரு இரையைக் கண்டால் தான் மட்டும் உண்ணாது தனது சகாக்களையும் அழைத்து பகுத்துண்ணும் பழக்கம் கொண்டது. சைவசமயத்தவர்கள் விரதம் அனுஷ்டிக்கும் போது உணவின் சிறுபகுதியை முதல் காகத்திற்கு வைத்தபின்னரே உண்ணத் தொடங்குவார்கள். இவை அனைத்தும் இன்று எமது சமூகத்திற்குத் தேவை. பண்பாடு, பழக்கவழக்கம் இரண்டும் இன்று ஐந்தறிவு ஜீவனாகிய காகத்திடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற கருத்தியலின் அடிப்படையிலே காகம் இருக்கிறமின் சின்னமாகியது. பத்திரிகை உலகில் 80 வருடகால அனுபவத்தைக் கொண்ட வீரகேசரியின் எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் (சிலோன்) லிமிட்டெட்டுடன் ‘இருக்கிறம்’ சஞ்சிகை இன்று கைகோர்த்திருக்கின்றது. ‘இருக்கிறம்’ சஞ்சிகையின் பதிப்புரிமை மற்றும் விநியோக, விளம்பரப் பணிகளை வீரகேசரி நிறுவனம் பொறுப்பேற்றிருக்கிறது. இதுவரை மாதமிருமுறை வெளிவந்து கொண்டிருந்த ‘இருக்கிறம்’ எதிர்வரும் ஏப்ரல் 4 முதல் வார இதழாக வீரகேசரி வெளியீட்டகத்தின் கீழ் வெளிவர இருப்பது வாசக நெஞ்சங்களின் அறிவுப்பசிக்கு தீனிபோடுவதாய் இருக்கும். இலங்கைத் தமிழ் சஞ்சிகை வரலாற்றிலே இது ஒரு மைல் கல் என்று சொல்லலாம். எதிர்காலத்தில் புதிய உத்வேகத்துடன் புதியபாதையில் பயணிக்கவிருக்கும் ‘இருக்கிறம்’ சஞ்சிகைக்கு வீரகேசரி சரியான ஒரு அடித்தளத்தையிட்டிருக்கிறது. வீரகேசரியின் ஆதரவுக்கு எமது நன்றிகள். வாசிப்புப் பழக்கம் மிகக் குறைவாக உள்ள சமூகமாக தமிழ்பேசும் மக்கள் இருப்பது இன்று பெரும் குறையாக இருக்கின்றது. இந்நிலையில் இவர்களை வாசிக்கத் தூண்டுவது ஒரு சஞ்சிகையின் பெரும் பணியாக இருக்கிறது. இலக்கியச் சிற்றேடுகள், ஜனரஞ்சக இதழ்கள் என்று வேறு திசைகளில் பயணித்த காலம் கரைந்து கொண்டு போகிறது. உயிர்மை, அம்ருதா, தீராநதி போன்றவை வாசகர்களுக்கு சீரியசான விடயங்களையும் எளிமையாகக் கொடுத்து வருகின்றன. ஆனால் ‘இருக்கிறம்’ அவற்றின் வழியில் கூடப் பயணிக்காது தனிவழியே செல்வது குறிப்பிடத்தக்கது. இன்று எமது மக்களைப் பொறுத்தவரையில் மாற்றம்தான் ஒரு முடிவாக இருக்கின்றது. மாற்றுக் கருத்துக்களும் மாற்றுச்சிந்தனைகளும் இன்று தமிழ் இளைஞர்கள் மத்தியில் பெரிதும் வரவேற்கப்படுகின்றன. அந்தவகையில் அதற்கான சமூக சஞ்சிகையாக இருக்கிறமின் எழுச்சி எதிர்காலத்தில் வாசகர்கள் மத்தியில் புதிய திசையொன்றைச் சுட்டிக்காட்டி நிற்கும் என்பது திண்ணம்.
Headlines <div style='background-color: none transparent;'></div>
Published On: 7:04 PM

ஐ.நாவில் கொடுக்கப்பட்ட வாக்குறுதி பொய்யானதா? நாடாளுமன்றில் சுமந்திரன் கேள்வி



ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிக்கு அமைய, பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்படவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நாடாளுமன்றில் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், இலங்கை அரசாங்கம் ஐ.நாவில் எழுத்து மூலம் வழங்கிய வாக்குறுதிகளை செயல்வடிவாக்கி உண்மையாக மனப்பூர்வமாக நிறைவேற்றவேண்டும் என்றும், இந்தச் செயற்பாடானது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம்பிக்கையையும், சந்தோஷத்தையும் ஏற்படுத்துவதாக அமையைவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற குற்றவியல் கருமங்களில் சீனாவுடன் இணைந்து செயற்படல் தொடர்பான பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்,

‘குற்றவியல் விடயத்தில் சீனாவுடன் இலங்கை ஏன் இந்த உடன்படிக்கையைச் செய்கிறது என எமக்குத் தெரியாது. இந்த ஒப்பந்தம் பற்றி எமக்கு சரியாகப் புரியவில்லை.

சில நாட்களுக்கு முன்னர் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் இணை அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் வெளிநாட்டு நீதிபதிகள், வழக்கறிஞர்கள், சட்டத்தரணிகள், நிபுணர்கள் இலங்கையில் நிறுவப்படவுள்ள நீதிமன்ற பொறிமுறைக்குள் வர நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்தச் சந்தர்ப்பத்தில் சட்டமா அதிபர் திணைக்களம், நீதிமன்றம், பொலிஸ் முதலான துறைகள் பற்றி விவாதிக்கப்படுகிறது. பொதுநலவாய மற்றும் ஏனைய நாடுகளில் உள்ளவர்கள் இலங்கைக்குள் வந்து ஒத்துழைப்பு வழங்க இலங்கை அரசு உடன்பட்டுள்ளது.

இலங்கையின் நம்பகத்தன்மை, நியாயத்தன்மை பற்றி ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் அறிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. இந்நிலையில், மாற்றத்துக்கான ஆரம்பம் வந்துள்ளது.

ஒரே இரவில் இந்த மாற்றங்களை ஏற்படுத்தமுடியாது. நீண்டகாலம் எடுக்கும். இந்தக் காலங்களில் சர்வதேசத்திலிருந்து தேவையான உதவிகளைப் பெற்றுக்கொள்ளவேண்டும். இந்தச் சந்தர்ப்பத்தில் நான் கவலைக்குரிய விடயமொன்றைக் குறிப்பிடுகின்றேன்.

15 ஆண்டுகள் சிறைவைக்கப்பட்டிருந்த வசந்தி ரகுபதி சர்மா அண்மையில் விடுதலைசெய்யப்பட்டார். இவர் மூன்று பிள்ளைகளின் தாயாவார். இந்த 15 ஆண்டுகளும் அவரின் பிள்ளைகள் வேறு நபர்களின் உதவியுடனேயே வாழ்ந்து வந்துள்ளனர். வசந்தி ரகுபதி சர்மா சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். 15 ஆண்டுகளாக அவரின் சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளது. இதற்குப் பொறுப்புக்கூறுவது யார்?

கடந்த 14ஆம் திகதி ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, இலங்கையில் பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்பட்டு சர்வதேசத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட சட்டம் உள்வாங்கப்படும் என்று அழுத்தம் திருத்தமாகக் கூறியிருந்தார்.
ஆனால், பயங்கரவாதத் தடைச்சட்டம் இன்னும் நீக்கப்படவில்லை. ஆறு மாதங்களுக்கு மட்டும் கொண்டுவரப்பட்ட இந்தப் பயங்கரவாதத் தடைச்சட்டம் பல ஆண்டுகளாக அமுலில் இருக்கிறது. மதிப்புக்குரிய தம்பதிகள் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின்கீழ் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டனர்.

பொலிஸாருக்குத் தகவல் வழங்காத காரணத்தால்தான் இவர்கள் கைதுசெய்யப்பட்டனர் எனக் கூறப்பட்டது. இந்த விடயத்தில் தாம் தொடர்ந்தும் விசாரணைக்கு உட்படுத்தப்படுவதால் அந்தத் தம்பதிகள் அந்தக் குற்றத்தை ஒப்புக்கொண்டு தண்டப்பணம் செலுத்தினர்.

இவ்வாறான நிலையில், பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குவதற்கு முன்னர் அந்தச் சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டவர்களை விடுவிக்கவேண்டும் என நான் கேட்கின்றேன்.

இறுதி யுத்தத்தின்போது சரணடைந்த 12,000 முன்னாள் போராளிகள் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டு விடுவிக்கப்பட்டபோது ஏன் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட 54 கைதிகளை விடுவிக்க முடியவில்லை? இந்த விடயத்தில் அரசியல் ரீதியாகத் தீர்மானம் எடுக்கவேண்டும்.

அரசியல் தீர்மானம் எடுத்து இந்தக் கைதிகளை விடுவிக்கவேண்டும். இது அரசின் கடமை. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அரசு கூறியதைப்போல தாம் வித்தியாசமானவர்கள் என்பதைக் காட்டவேண்டும்.

அவை வெறும் வசனங்களில் மட்டும் இல்லாமல் செயல் வடிவமாக்கப்படவேண்டும். இவற்றை உண்மையாக மனப்பூர்வமாக நிறைவேற்றுங்கள். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம்பிக்கை, சந்தோஷத்தை வழங்குவதாக இந்த நடவடிக்கை அமையவேண்டும்’ என்றும் கூறினார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

Related News




comments powered by Disqus

Text Ad

Advertstment

தலைப்பு