எங்களைப் பற்றி | தொடர்புகளிற்கு சாம்பலிலிருந்து எழும் பீனிக்ஸ் பறவையாக இருக்கிறம் மீண்டும் பறக்கத் தொடங்கியிருக்கிறது. கடந்த நான்கு வருடங்களில் சஞ்சிகையை மாதமிருமுறை வெளியிடுவதில் ஏற்பட்ட தாமதங்கள், பொருளாதாரத் தடைகள் என பல பிரச்சனைகளுக்கு முகங்கொடுத்து பகீரத பிரயத்தனத்திற்கு மத்தியில் இருக்கிறம் வெளிவந்துகொண்டிருந்ததை யாவரும் அறிவர். அதிகரித்து வரும் செலவீனங்கள், விநியோகத்திலுள்ள ஆட்பல பற்றாக்குறை, சந்தைப்படுத்தலிலுள்ள குறைபாடுகள் என பல்வேறு நெருக்கடிகளுக்குள் இருக்கிறம் சிக்கித் திணறத்தொடங்கியதால் ஜனவரி மாதம் 64 ஆவது இதழுடன் தனது பயணத்தை தற்காலிகமாக இடைநிறுத்தியிருந்தது. எனினும் இச்சஞ்சிகைக்காக இரவுபகல் கண்விழித்து அயராது பாடுபட்டுவரும் துடிப்புமிக்க இதழியல் துறைசார்ந்த இளைஞர் குழுவினருடன் பணியாற்றும் துணிச்சல் மிக்க பத்திரிகையாளர்களும் எழுத்தாளர்களும் மீண்டும் இருக்கிறம் சஞ்சிகையை கொண்டுவர பல முயற்சிகளையும் மேற்கொண்டனர். மனதில் துணிவும், நம்பிக்கையும், ஆதரவளிக்கும் வாசகர்களும் இருக்கிறமுடன் கூடவே இருந்ததால் மீண்டும் இருக்கிறம் தனது பயணத்தை வார இதழாக ஆரம்பித்து இருக்கிறது. இலங்கையைப் பொறுத்தவரையில் தமிழ்ச் சஞ்சிகை ஒன்றை ஆரம்பித்து தொடர்ந்து நடத்துவது என்பது எந்தளவுக்கு சவாலானது என்பது அனைவருக்கும் தெரியும். குறிப்பாக தமிழகத்திலிருந்து வெளிவரக் கூடிய சஞ்சிகைகளின் போட்டியைச் சமாளிக்க வேண்டும். அந்தளவு தூரத்திற்கு அதற்கான விடயப்பரப்போ, அச்சுத் தரமோ, வாசகர்களின் ஆதரவோ இலங்கையில் இல்லை. அதனால்தான் இலங்கையைப் பொறுத்தவரையில் நின்று போன சஞ்சிகைகளின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. பற்றி எரியும் அன்றாடப் பிரச்சினைகள், தமிழ், முஸ்லிம், மலையக மக்களின் வாழ்வைப் புரட்டிப்போட்டு நிற்கும் சிக்கல்கள் போன்றவற்றையே பெரும்பாலும் உள்ளடக்கங்களின் பிரதான கருப்பொருளாகக் கொண்டு ~இருக்கிறம்’ வெளியாவதால் அது தமிழ் பேசும் மக்களின் உயிர்த்துடிப்பின் பிரதிபலிப்பாக நிற்கின்றது என்பது வெள்ளிடைமலை. ஏனைய சஞ்சிகைகள் இலக்கியத்தை முதற் பொருளாகப் பேச, ‘இருக்கிறம்| வெகுசன வாசிப்புக்குத் தீனிபோடும் பல்துறை சார்ந்த இதழாகத் தன்னை அடையாளப்படுத்தி நிற்கிறது. இலக்கியத் தரப்பை மட்டுமல்லாமல், சகலரையும் வாசிக்க வைக்கவேண்டுமென்பதே இதன் நோக்கம். ஆரோக்கியமான வாசிப்பு அனுபவத்தைத் தருவதுதான் ‘இருக்கிறம்’ பெற்றுள்ள வெற்றிக்குப் பிரதான காரணம். இவற்றுக்கும் மேலாக சமூக அவலங்களை பிரதேச மண்வாசனையோடு நகைச்சுவையாகத் தருவதில் ‘இருக்கிறம்’ ஒரு தனித்துவத்தைப் பெற்றிருக்கின்றது. கருத்தைக் கவரும் லாவகமான எழுத்து நடை, காத்திரமான கட்டுரைகள், நேர்த்தியான அச்சு, ஒழுங்கமைப்பான பக்க வடிவமைப்பு, கவர்ச்சியான கட்டமைப்பு, வண்ணப் பிரதிபலிப்பு, இதுவே “இருக்கிறம்”. அதென்ன “இருக்கிறம்” என்று இன்றும் பலர் கேள்வியெழுப்புகின்றனர். யுத்த அழிவுகளில் சிக்கி, ஆக்கிரமிப்பு, அழுத்தங்களில் துவண்டு, வாழ்வியல் சோகங்களில் மூழ்கி நலிவுற்றிருக்கும் எமது தமிழ்பேசும் மக்களையோ அல்லது புலம்பெயர் தமிழர்களையோ பார்த்து “எப்படி இருக்கிறீர்கள்?” என்று கேட்டால் “இருக்கிறம்” என விரக்தியாகப் பதில் சொல்வார்கள். ஆனால் நாங்களும் “இருக்கிறம்” என்ற அடையாளத்தோடு உயிர்த்துடிப்புள்ள சஞ்சிகையாக இருக்கிறம் நான்கு ஆண்டுகளாக வெளிவந்துகொண்டிருக்கிறது. ‘ஏதோ இருக்கிறம்’, ‘எப்படியோ இருக்கிறம்’, ‘சும்மா இருக்கிறம்’, என்பவர்களுக்கிடையில் ‘இருக்கின்றவர்களுக்காய் இருக்கிறம்’ என்ற தற்துணிவுடன் இருக்கிறம் வெளிவந்து கொண்டிருக்கின்றது. உலகில் வெளிவந்து கொண்டிருக்கும் சஞ்சிகைகளோ நூல்களோ பெயர்ச்சொல்லில்தான் தமக்குரிய பெயரை அடையாளப்படுத்துகின்றன. ஆனால் ஈழத்தமிழர்களின் வாழ்வியலை வெளிக்காட்டுவதற்காய் வினைச்சொல்லிலே இருக்கிறம் தனது பெயரை வகுத்துக் கொண்டது. ஏனெனில் இன்று நாமெல்லாம் வினைகளாகத்தானே இருக்கிறோம். இருக்கிறமின் மகுட வாக்கியம் “ஒரு பொல்லாப்பும் இல்லை” என்ற யோகர் சுவாமிகளின் கூற்று. ‘ஒரு பொல்லாப்புமில்லை, எப்பவோ முடிந்த காரியம்..” என்றார் அந்த தேரடிச் சித்தர். உண்மைதான் ‘ஒரு பொல்லாப்பும் இல்லை| என்பதோடு, ‘இருக்கிறம்| தனது செயற்பாடுகளை வரையறுத்துக் கொள்ளாது எமது எதிர்காலம் குறித்து அறிவார்ந்த ஆய்வு முறைகளுக்கும் இடம் தருகின்றது. ஈழத்தமிழ்ச் சமூகம் தனது கலைந்து போன கனவுகளை நனவாக்குவதற்கு இந்த அணுகுமுறை அவசியமானதால் அதை நோக்கிய இருக்கிறமின் பயணம் மிகவும் துணிச்சலானது. ‘இருக்கிறம்’ என்ற சின்னத்தில் இரண்டு காகங்கள் ஏன் எதிரும்புதிருமாக ஒன்றையொன்று பார்த்தவண்ணம் உட்கார்ந்திருக்கின்றன? காகத்தை விட வேறு பறவைகள் சின்னங்களாக இல்லையா? என்று நீங்கள் கேட்கலாம். எங்களுடைய நாட்டில் காகம்தான் எங்கும் காணப்படும் பறவை. சாதாரண பொது சனங்களை அது அடையாளப்படுத்துகிறது. காகம் எமது வாழ்வியலுடன் நெருங்கிய தொடர்புபட்டது. ஒரு இரையைக் கண்டால் தான் மட்டும் உண்ணாது தனது சகாக்களையும் அழைத்து பகுத்துண்ணும் பழக்கம் கொண்டது. சைவசமயத்தவர்கள் விரதம் அனுஷ்டிக்கும் போது உணவின் சிறுபகுதியை முதல் காகத்திற்கு வைத்தபின்னரே உண்ணத் தொடங்குவார்கள். இவை அனைத்தும் இன்று எமது சமூகத்திற்குத் தேவை. பண்பாடு, பழக்கவழக்கம் இரண்டும் இன்று ஐந்தறிவு ஜீவனாகிய காகத்திடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற கருத்தியலின் அடிப்படையிலே காகம் இருக்கிறமின் சின்னமாகியது. பத்திரிகை உலகில் 80 வருடகால அனுபவத்தைக் கொண்ட வீரகேசரியின் எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் (சிலோன்) லிமிட்டெட்டுடன் ‘இருக்கிறம்’ சஞ்சிகை இன்று கைகோர்த்திருக்கின்றது. ‘இருக்கிறம்’ சஞ்சிகையின் பதிப்புரிமை மற்றும் விநியோக, விளம்பரப் பணிகளை வீரகேசரி நிறுவனம் பொறுப்பேற்றிருக்கிறது. இதுவரை மாதமிருமுறை வெளிவந்து கொண்டிருந்த ‘இருக்கிறம்’ எதிர்வரும் ஏப்ரல் 4 முதல் வார இதழாக வீரகேசரி வெளியீட்டகத்தின் கீழ் வெளிவர இருப்பது வாசக நெஞ்சங்களின் அறிவுப்பசிக்கு தீனிபோடுவதாய் இருக்கும். இலங்கைத் தமிழ் சஞ்சிகை வரலாற்றிலே இது ஒரு மைல் கல் என்று சொல்லலாம். எதிர்காலத்தில் புதிய உத்வேகத்துடன் புதியபாதையில் பயணிக்கவிருக்கும் ‘இருக்கிறம்’ சஞ்சிகைக்கு வீரகேசரி சரியான ஒரு அடித்தளத்தையிட்டிருக்கிறது. வீரகேசரியின் ஆதரவுக்கு எமது நன்றிகள். வாசிப்புப் பழக்கம் மிகக் குறைவாக உள்ள சமூகமாக தமிழ்பேசும் மக்கள் இருப்பது இன்று பெரும் குறையாக இருக்கின்றது. இந்நிலையில் இவர்களை வாசிக்கத் தூண்டுவது ஒரு சஞ்சிகையின் பெரும் பணியாக இருக்கிறது. இலக்கியச் சிற்றேடுகள், ஜனரஞ்சக இதழ்கள் என்று வேறு திசைகளில் பயணித்த காலம் கரைந்து கொண்டு போகிறது. உயிர்மை, அம்ருதா, தீராநதி போன்றவை வாசகர்களுக்கு சீரியசான விடயங்களையும் எளிமையாகக் கொடுத்து வருகின்றன. ஆனால் ‘இருக்கிறம்’ அவற்றின் வழியில் கூடப் பயணிக்காது தனிவழியே செல்வது குறிப்பிடத்தக்கது. இன்று எமது மக்களைப் பொறுத்தவரையில் மாற்றம்தான் ஒரு முடிவாக இருக்கின்றது. மாற்றுக் கருத்துக்களும் மாற்றுச்சிந்தனைகளும் இன்று தமிழ் இளைஞர்கள் மத்தியில் பெரிதும் வரவேற்கப்படுகின்றன. அந்தவகையில் அதற்கான சமூக சஞ்சிகையாக இருக்கிறமின் எழுச்சி எதிர்காலத்தில் வாசகர்கள் மத்தியில் புதிய திசையொன்றைச் சுட்டிக்காட்டி நிற்கும் என்பது திண்ணம்.
Headlines <div style='background-color: none transparent;'></div>
Published On: 8:45 AM

ஆடையில்லா மனிதன்...



பிரபல ஆயத்த ஆடையகம் அது. பண்டிகையோ, விடுமுறை தினமோ, முகூர்த்த தினமோ இல்லாத அந்த நாளன்றுகூட, ஒருவர் கால்மீது கால் மிதிபடுமளவு கூட்டம்!! விடுமுறை நாட்களில் வந்தால் கூட்டம் இருக்கும் என்று வேலை நாளை தேர்ந்தெடுத்து வந்த பின்பும் இவ்வளவு கூட்டமா என்று கவலையோடு பிரமித்து நின்றேன். ஒவ்வொரு விடுமுறையிலும், குடும்பத்தினருக்கான ஆடையை இந்தியா வரும்போதே வாங்கிச் செல்வது வழக்கம். அதற்காக வந்தபோதுதான் பிரமிப்பு .

முன்பெல்லாம், வருடத்திற்கு இரண்டு பெருநாட்களுக்கு மட்டும்தான் மக்கள் ஆடைகள் வாங்குவர். (இப்போதும் நான் அப்படித்தான்). ஆனால், சமீப வருடங்களாக ஆடைகள் வாங்குவதற்கு தனி சந்தர்ப்பங்கள் என்று தேவைப்படுவதில்லை மக்களுக்கு. “ஷாப்பிங்” என்பது ஒரு பொழுதுபோக்காக - hobby- ஆகிப் போகியிருக்கிறது. பணப்புழக்கம் அதிகரித்து விட்டதா அல்லது துணிகள் விலை குறைந்து விட்டனவா?

நாம் ஏன் ஆடை அணிகிறோம்? நம் மானம் மறைக்க, நம்மை அழகுபடுத்த, குறைகள் வெளியே தெரியாமலிருக்க, தட்பவெப்பங்களிலிருந்து பாதுகாக்க, நம்மைப் புற அசுத்தங்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ள என்று பல காரணங்கள்.

ஆனால்.... இன்றுள்ள ஆடைகள் இந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்கின்றனவா; அல்லது, இன்று அதிக எண்ணிக்கையில் ஆடைகள் வாங்கப்படுவது உண்மையிலேயே இந்தக் காரணங்களை முன்னிட்டுத்தானா?

குர் ஆனில் இறைவன், கணவன் - மனைவியை “ஒருவருக்கொருவர் ஆடையாக இருக்க வேண்டும்” என்கிறான். இது ஏதோ சும்மா ஒரு உதாரணத்துக்குச் சொன்னது என்று எண்ணத் தோன்றும். ஏன் ஆடையைச் சொல்ல வேண்டும்? எத்தனையோ நபிமார்கள் இருக்கின்றனர், அவர்களில் ஒரு தம்பதியைச் சொல்லி, இவர்களைப் போல வாழுங்கள் என்று சொல்லியிருக்கலாம். அல்லாமல், ஆடையைச் சொன்ன காரணம் என்ன?

2:187. .... அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள்....

உலகத்தின் உயிரினங்களில், ஆறறிவு என்பது மனிதனுக்கு மட்டுமே உரியது. போலவே, ஆடையும் மனிதனுக்கு மட்டுமே உரியது. இதிலிருந்தே அதன் சிறப்பு புரியும். அதைத் தம்பதியருக்குப் பொருத்திப் பார்த்ததன் உயர்வு புரியும். வாழ்க்கைத்துணையைக் கூறும் இடத்தில் ஆடையும் ஆடையைக் கூறும் இடத்தில் வாழ்க்கைத்துணையும் எவ்வாறு பொருந்திப்போகின்றனர் பாருங்கள்.. சுப்ஹானல்லாஹ். அந்த ஒற்றை வசனத்தில் தான் அல்லாஹ் நமக்கு எத்தனை அழகிய பாடங்கள் வைத்திருக்கிறான்!!!

ஆடையின்றி மனிதன் இல்லை. உணவு, உறைவிடம் இல்லாமல் இருந்துவிட முடியும். தமக்கென தனியே இல்லாவிடினும், உணவையும் உறைவிடத்தையும் மற்றவரோடு பகிர்ந்து கொள்ளலாம். ஆனால், ஆடை..? எல்லாவற்றையும் விட அத்தியாவசியமானது ஆடை. வாழ்க்கைத் துணையும் அதைப் போன்ற அத்தியாவசியமானவர். நம் மானம் காக்க உதவுபவர். நம் குறைகள் வெளியே தெரியாமல் பாதுகாக்க வேண்டியவர்;

ஆடை அறியா இரகசியமுண்டா நம் உடலில்? கணவன் - மனைவியும் அதுபோல தமக்கென தனிப்பட்ட இரகசியம் இல்லாத புரிந்துணவுடன் வாழ வேண்டியவர்கள்.

உடலில் குறைகள் எத்தனை இருப்பினும், அதை மறைக்க வேண்டிய விதத்தில் மறைத்து, நம்மைக் கௌரவமாகத் தோன்றச் செய்வது ஆடை. வாழ்க்கைத் துணையும் அவ்விதமே இருக்க வேண்டியவர். ஒருவர் அடுத்தவரின் குணத்தில் உள்ள குறைகளை மறைத்து, வெளியாரிடம் பெருமைப்படச் செய்ய வேண்டியவர்.

கடும் வெயிலிலும் குளிரிலும் பனியிலும் நம்மைப் பாதுகாப்பது நம் உடை. தம்பதிகளும் அவ்விதமே ஒருவருக்கொருவரை, மற்றவர்களின் தீய எண்ணங்கள், இச்சைகள் போன்ற புற தீங்குகளிலிருந்து பாதுகாத்துக் கொள்வர். தம்மிலிருந்து மற்றவரை நோக்கித் தோன்றக்கூடிய தீய எண்ணங்கள், இச்சைகளை உரிய முறையில் தடுத்துக் கொள்ள கருவியாக இருக்க வேண்டியவர்கள்.

ஆடைகளைப் பராமரிப்பது என்பது ஒரு கலைத்திறமைக்கு ஒப்பானது. ஆடைகளின் தன்மையைப் பொறுத்து அதைப் பேணும் முறையும் அமைகிறது. ஆடையை அணிந்தால் அழுக்காகத்தான் செய்யும். அழுக்காகி விட்டது என்பதற்காக அதை குப்பையில் வீசிவிடுவதில்லை. தகுந்த முறையில் சுத்தம் செய்து மீண்டும் அணிகிறோம்.

ஒருவேளை சிறு கிழிசல்கள் ஏற்பட்டுவிட்டாலும், அதைத் தூக்கியெறிந்து விடுவதில்லை. முறையாகச் செப்பனிட்டு, பயன்பாட்டைத் தொடர்கிறோம்.

விசேஷ சந்தர்ப்பங்களின்போது அணிந்த ஆடைகளைப் பாதுகாத்துப் பராமரித்து வருகிறோம். ஃபேஷன் மாறினாலும், அதைத் தூர எறிந்து விடாமல், காலத்துக்கேற்றவாறு “ஆல்டர்” செய்து அணிந்து அழகுபார்க்கிறோம்.

அதற்காக அளவு மாற்றமாகிப் போய் அணியவே முடியாதபடி ஆகிப்போன உடையையோ, இனி தைக்கவே முடியாதபடி கிழிசலாகிப் போன உடையையோ ‘செண்டிமெண்ட்’ என்ற பெயரில் வைத்துக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை!!

மானம் மறைத்து, அழகுபடுத்தி, குறைகள் வெளியே தெரியாமல், புற அசுத்தங்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுமளவு உறுதியாக இருப்பவையே சிறந்த ஆடைகள். மாறாக, குறைகளை வெளிச்சம் போட்டு காட்டும், அல்லது புற தீங்குகள் நம் உடலைத் தாக்க ஏதுவாக நம் உடலை வெளிப்படுத்தி துன்பத்தை வரவைப்பவை அல்ல!

முன்பெல்லாம் ஆடைகள் வாங்குவதென்பது ஒரு திருவிழாவுக்கு இணையான கொண்டாட்டமாக இருந்தது. இன்று ஆடைகள் வாங்குவது மிக சாதாரணமான செயலாகிவிட்டது. அன்று புத்தாடைகளுக்கு கிடைத்த மதிப்பும், பேணுதலும், இன்றைய புத்தாடைகளுக்குக் கிடைப்பதில்லை. காரணம், ஆடைகள் மிகுந்து போனதால் இருக்குமோ? நாள்தோறும் மாறும் நாகரீகத்திற்கேற்றவாறு அணிவதற்காக, பழைய ஆடைகளைத் தூக்கி எறிந்துவிட்டு, புதிய ஆடைகள் வாங்குவதென்பது மிக இலகுவாகிப் போனதாலா?

அன்று வாங்கும் ஆடைகள் காலத்துக்கும் நீடித்து உழைப்பவாய் இருந்தன. பாட்டியின் உடைகள் பல தலைமுறைக்கும் நீடித்து வருமளவு சிறந்தனவாய் இருந்தன. இன்று வாங்கும் உடைகளோ, பார்க்கப் பகட்டாய் இருந்தாலும், சில முறை அணிவதற்குள்ளேயே இத்துப் போய்விடுகின்றன. ஆடைகளின் தரம் குறைந்துவிட்டது காரணமா, பராமரிப்பு குறைவா?

இறைவன் ஆதி மனிதன் ஆதம்(அலை) அவர்களைப் படைத்து சுவர்க்கத்தில் குடியேற்றியபோது, சுவர்க்கத்தில் இல்லாத வசதிகள் இல்லை. எனினும், மனிதனால் தனிமையில் இனிமை காண முடியாது என்பதை அறிந்ததால்தான், துணையைப் படைத்தான். எப்பேர்ப்பட்ட வசதிகள் இருந்தாலும், துணை இருந்தால்தான் வாழ்வு ருசிக்கும்.

”ஆடையில்லா மனிதன் அரைமனிதன்” என்பது பழமொழி. இதையே நபி(ஸல்) அவர்கள், “திருமணம் ஈமானில் பாதி” என்று உணர்த்தினார்கள்.

சுகந்தத்தின் மணம் காற்றில் கலந்துவிட்டால், பின்னர் அதைப் பிரிக்க இயலாது. திரு’மணம்’ என்ற நிகழ்வில் இணையும் இருமனங்களும் பிரிக்க இயலாதபடி கலந்துவிடுவதே மணவாழ்வை “மணக்கச்” செய்யும்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

Related News




comments powered by Disqus

Text Ad

Advertstment

தலைப்பு