தெற்கு இஸ்ரேலிய நகரான டிமோனாவில், அரோபியர்கள் நால்வரை கத்தியால் குத்திய யூதர் ஒருவரை கைதுசெய்துள்ளதாக இஸ்ரேலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கத்திக்குத்துக்கு உள்ளானவர்களில் இரண்டு பேர் சிறுபான்மை நாடோடி அராபியர்களான பதாவிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் மற்ற இரண்டு பேரும் பாலஸ்தீனர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதலை நடத்தியவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகின்றது.
மேலும், மேற்குக் கரையில் கிர்யாட் அர்பா என்ற இடத்தில் உள்ள யூதக் குடியேற்றப் பகுதியின் நுழைவாயிலில் பொலிஸ்காரர் ஒருவரை கத்தியால் குத்திய பாலஸ்தீனர் ஒருவரை சுட்டுக்கொன்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இரண்டு நாட்கள் பயணமாக நாளை (சனிக்கிழமை) மாலைத்தீவுக்கு செல்கிறார்.
அங்கு 15 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் இரு நாடுகளின் கூட்டமைப்பு மாநாட்டில் பங்கேற்கிவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் கூறுகையில்,
கடந்த 2000மாவது ஆண்டு இரு நாடுகளின் கூட்டமைப்பு மாநாடு நடைபெற்றது.
தற்போது 15 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா, மாலத்தீவு வெளியுறவுத்துறை அமைச்சர் துன்யா மவுமூன் ஆகியோர் தலைமையில் நடக்கிறது.
தனது பயணத்தின் போது சுஷ்மா, மாலத்தீவு அதிபர் அப்துல்லா யாமீனையும் சந்திக்கிறார்.
இதன்போது அவருடன் பொருளாதாரம், பாதுகாப்பு, வளர்ச்சி உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பேச்சு வார்த்தை நடத்தவுள்ளார்.
இதனையடுத்து, இந்தியா மாலத்தீவு இடையிலான உறவில் இரு நாடுகளின் கூட்டமைப்பு மாநாடு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். மாலத்தீன் ஜனநாயகம் பாதுகாக்கப்பட இந்தியா தொடர்ந்து தனது ஆதரவை அளிக்கும்.
மேலும் மாலத்தீவில் அமைதியும் ஸ்திரத்தன்மையும் உருவாக வேண்டும் என இந்தியா விரும்புகிறது என்று அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிக்கு அமைய, பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்படவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நாடாளுமன்றில் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், இலங்கை அரசாங்கம் ஐ.நாவில் எழுத்து மூலம் வழங்கிய வாக்குறுதிகளை செயல்வடிவாக்கி உண்மையாக மனப்பூர்வமாக நிறைவேற்றவேண்டும் என்றும், இந்தச் செயற்பாடானது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம்பிக்கையையும், சந்தோஷத்தையும் ஏற்படுத்துவதாக அமையைவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற குற்றவியல் கருமங்களில் சீனாவுடன் இணைந்து செயற்படல் தொடர்பான பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்,
‘குற்றவியல் விடயத்தில் சீனாவுடன் இலங்கை ஏன் இந்த உடன்படிக்கையைச் செய்கிறது என எமக்குத் தெரியாது. இந்த ஒப்பந்தம் பற்றி எமக்கு சரியாகப் புரியவில்லை.
சில நாட்களுக்கு முன்னர் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் இணை அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் வெளிநாட்டு நீதிபதிகள், வழக்கறிஞர்கள், சட்டத்தரணிகள், நிபுணர்கள் இலங்கையில் நிறுவப்படவுள்ள நீதிமன்ற பொறிமுறைக்குள் வர நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்தச் சந்தர்ப்பத்தில் சட்டமா அதிபர் திணைக்களம், நீதிமன்றம், பொலிஸ் முதலான துறைகள் பற்றி விவாதிக்கப்படுகிறது. பொதுநலவாய மற்றும் ஏனைய நாடுகளில் உள்ளவர்கள் இலங்கைக்குள் வந்து ஒத்துழைப்பு வழங்க இலங்கை அரசு உடன்பட்டுள்ளது.
இலங்கையின் நம்பகத்தன்மை, நியாயத்தன்மை பற்றி ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் அறிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. இந்நிலையில், மாற்றத்துக்கான ஆரம்பம் வந்துள்ளது.
ஒரே இரவில் இந்த மாற்றங்களை ஏற்படுத்தமுடியாது. நீண்டகாலம் எடுக்கும். இந்தக் காலங்களில் சர்வதேசத்திலிருந்து தேவையான உதவிகளைப் பெற்றுக்கொள்ளவேண்டும். இந்தச் சந்தர்ப்பத்தில் நான் கவலைக்குரிய விடயமொன்றைக் குறிப்பிடுகின்றேன்.
15 ஆண்டுகள் சிறைவைக்கப்பட்டிருந்த வசந்தி ரகுபதி சர்மா அண்மையில் விடுதலைசெய்யப்பட்டார். இவர் மூன்று பிள்ளைகளின் தாயாவார். இந்த 15 ஆண்டுகளும் அவரின் பிள்ளைகள் வேறு நபர்களின் உதவியுடனேயே வாழ்ந்து வந்துள்ளனர். வசந்தி ரகுபதி சர்மா சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். 15 ஆண்டுகளாக அவரின் சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளது. இதற்குப் பொறுப்புக்கூறுவது யார்?
கடந்த 14ஆம் திகதி ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, இலங்கையில் பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்பட்டு சர்வதேசத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட சட்டம் உள்வாங்கப்படும் என்று அழுத்தம் திருத்தமாகக் கூறியிருந்தார்.
ஆனால், பயங்கரவாதத் தடைச்சட்டம் இன்னும் நீக்கப்படவில்லை. ஆறு மாதங்களுக்கு மட்டும் கொண்டுவரப்பட்ட இந்தப் பயங்கரவாதத் தடைச்சட்டம் பல ஆண்டுகளாக அமுலில் இருக்கிறது. மதிப்புக்குரிய தம்பதிகள் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின்கீழ் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டனர்.
பொலிஸாருக்குத் தகவல் வழங்காத காரணத்தால்தான் இவர்கள் கைதுசெய்யப்பட்டனர் எனக் கூறப்பட்டது. இந்த விடயத்தில் தாம் தொடர்ந்தும் விசாரணைக்கு உட்படுத்தப்படுவதால் அந்தத் தம்பதிகள் அந்தக் குற்றத்தை ஒப்புக்கொண்டு தண்டப்பணம் செலுத்தினர்.
இவ்வாறான நிலையில், பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குவதற்கு முன்னர் அந்தச் சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டவர்களை விடுவிக்கவேண்டும் என நான் கேட்கின்றேன்.
இறுதி யுத்தத்தின்போது சரணடைந்த 12,000 முன்னாள் போராளிகள் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டு விடுவிக்கப்பட்டபோது ஏன் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட 54 கைதிகளை விடுவிக்க முடியவில்லை? இந்த விடயத்தில் அரசியல் ரீதியாகத் தீர்மானம் எடுக்கவேண்டும்.
அரசியல் தீர்மானம் எடுத்து இந்தக் கைதிகளை விடுவிக்கவேண்டும். இது அரசின் கடமை. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அரசு கூறியதைப்போல தாம் வித்தியாசமானவர்கள் என்பதைக் காட்டவேண்டும்.
அவை வெறும் வசனங்களில் மட்டும் இல்லாமல் செயல் வடிவமாக்கப்படவேண்டும். இவற்றை உண்மையாக மனப்பூர்வமாக நிறைவேற்றுங்கள். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம்பிக்கை, சந்தோஷத்தை வழங்குவதாக இந்த நடவடிக்கை அமையவேண்டும்’ என்றும் கூறினார்.
ஐரோப்பிய கால்பந்தாட்ட போட்டியின் தகுதிகாண் சுற்றில் அர்லாந்து வெற்றி பெற்றது.
ஐரோப்பிய கால்பந்தாட்ட போட்டியின் தகுதிகாண் போட்டியின் டீ அணிப் பிரிவில் அயர்லாந்து மற்றும் ஜேர்மனி அணிகள் மோதின.
போட்டியின் முதல் பாதியில் இரு அணிகளாலும் கோல் எதனையும் போடமுடியவில்லை, எனினும் 70 ஆவது நிமிடத்தில் அயர்லாந்து கோல் ஒன்றைப் போட்டு வெற்றியை தனதாக்கியது.
ஐரோப்பிய கால்பந்தாட்ட தகுதிகாண் போட்டிகள் 9 பிரிவுகளாக நடைபெறுகின்றன.
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ இன்று பாரிய நிதி மோசடிகள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன் ஆஜராகினார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது ரக்னா லங்கா நிறுவனத்தின் ஊழியர்களைத் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்திய சம்பவம் தொடர்பில் சாட்சியம் பெற்றுக்கொள்வதற்காக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் இன்று அழைக்கப்பட்டதாக ஆணைக்குழுவின் செயலாளர் லெசில் டி சில்வா தெரிவித்தார்.
ரக்னா லங்கா நிறுவனத்தின் கணக்காய்வாளர்கள் இருவரிடம் சுமார் 3 மணித்தியாலங்கள் வரை விசாரணை நடத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
வீதிகளில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்குப் பொறுப்புக்கூற வேண்டிய சகல தரப்பினர்கள் மற்றும் நிறுவன பிரதிநிதிகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
வீதி நெரிசல் காரணமாக மக்களுக்கு ஏற்பட்டுள்ள அசௌகரியங்கள் குறித்து சம்பந்தப்பட்ட தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக ஆணைக்குழுவின் சட்ட செயலாளர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா குறிப்பிட்டுள்ளார்.
வாகன நெரிசல் காரணமாக தொழில் நிமித்தம் செல்கின்றவர்கள் மற்றும் பொது மக்களுக்கு பல்வேறு அசௌகரியங்கள் ஏற்படுவது குறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
அத்துடன் தேசிய வருமானத்தில் பல மில்லியன் ரூபா விரையம் ஏற்படுவதாக ஆணைக்குழுவின் சட்ட செயலாளர் தெரிவித்தார்.
பொலிஸ் போக்குவரத்து பிரிவைச் சேர்ந்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் நகர அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள் என பல்வேறு தரப்பினரை அழைத்து போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கான தேசிய திட்டமொன்றை தயாரிப்பதன் முக்கியத்துவம் குறித்து ஆராய்ந்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக மேற்கொள்ளக்கூடிய குறுகிய, மத்திய மற்றும் நீண்டகால தீர்வுகள் குறித்து எதிர்காலத்தில் தொடர்ந்தும் பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வேலையில்லாப் பட்டதாரிகளின் உண்ணாவிரதப் போராட்டம் இன்று (09) மூன்றாவது நாளாகவும் இடம்பெற்று வருகின்றது.
மட்டக்களப்பு – காந்தி பூங்காவில் இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகின்றது.
இது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக கிழக்குமாகாண முதலமைச்சர் அங்கு விஜயம் செய்திருந்தார்.
சுமார் 300 இற்கும் அதிகமான பட்டதாரிகள் காலவரையறையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுட்டுள்ளனர்.
இதன் போது 10 அம்சக் கோரிக்கைகள் அடங்கிய மகஜர் கிழக்குமாகாண முதலமைச்சரிடம் கையளிக்கப்பட்டது.
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு உட்பட 4 ஆணைக்குழுக்களுக்கு உறுப்பினர்கள் தெரிவு
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு, அரச சேவைகள் ஆணைக்குழு, பொலிஸ் ஆணைக்குழு மற்றும் மனித உரிமைகள்ஆ ணைக்குழு ஆகியவற்றிற்கான உறுப்பினர்கள் இன்று தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் நீல் இத்தவெல குறிப்பிட்டுள்ளார்.
அரசியலமைப்பு பேரவை இன்று (09) கூடியபோது இந்த சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான உறுப்பினர்கள் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.
இந்த பெயர் விபரங்களை இன்றைய தினத்திற்குள் ஜனாதிபதிக்கு அனுப்பிவைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் கூறியுள்ளார்.
சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு தகுதியான உறுப்பினர்களை தெரிவுசெய்வதற்கான பொறுப்பு அரசியலமைப்பு பேரவைக்கு வழங்கப்பட்டிருந்தது.
அடுத்த மாதம் 4 ஆம் திகதி அரசியலமைப்பு பேரவை மீண்டும் கூடவுள்ளது.
துனிசியாவின் தேசிய பேச்சுவார்த்தை குழுவிற்கு (Tunisian National Dialogue Quartet) 2015ஆம் ஆண்டிற்கான சமாதானத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
துனிசியாவின் பன்முக ஜனநாயகக் கட்டமைப்பிற்கு பாரிய பங்களிப்பினைச் செய்தமைக்காக இந்த நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
நான்கு அமைப்புகளை உள்ளடக்கிய இந்த பேச்சுவார்த்தைக் குழு துனிசியாவில் அரபு எழுச்சி தொடங்கிய நிலையில் அங்கு ஜனநாயக முறையில் ஆட்சி மாற்றம் ஏற்படப் பாடுபட்டது.

2015 ஆம் ஆண்டிற்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெலாரஸ் நாட்டைச் சேர்ந்த பெண் எழுத்தாளரான ஸ்வெட்லானாவிற்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
படைப்பிலக்கியத் துறையில் உலகளாவிய சாதனை படைத்ததற்காக, ஐரோப்பிய நாடான பெலாரஸ் நாட்டைச் சேர்ந்த பெண் எழுத்தாளர் ஸ்வெட்லானா அலெக்ஸீவிச்சுக்கு (வயது 67) இந்தப் பரிசு வழங்கப்படவுள்ளது.
இதை ஸ்வீடன் நாட்டின் ஸ்டாக்ஹோம் நகரில் நோபல் பரிசு குழு நேற்று (08) அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
‘‘நமது காலத்தின் பாடுகள் மற்றும் துணிச்சலுக்கான நினைவுச்சின்னமாக இவரது பல குரல் கொண்ட எழுத்துக்கள் ஒலித்துள்ளன’’ என நோபல் விருதுக்குழு தெரிவித்துள்ளது.
இவர் கடந்த 40 ஆண்டுகளாக சோவியத் மக்கள் மற்றும் சோவியத்திற்கு பிந்தைய காலகட்ட மக்களின் வாழ்க்கை முறையை ஆராய்ந்து பதிவு செய்து வந்துள்ளார்.
உக்ரைனில் உள்ள செர்னோபில் அணு உலை விபத்து துயரம், ஆப்கானிஸ்தான்– சோவியத் போர் போன்றவற்றின் இவரது பதிவுகளை உதாரணமாகக் கூறலாம்.
குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என பல்லாயிரக்கணக்கானோரை பேட்டி கண்டு, நாம் அறிந்திராத நிகழ்வுகளை தந்திருக்கிறார்.
அதேவேளை, இவர் உணர்வுகளின் வரலாற்றையும், ஆன்மாவின் சரித்திரத்தையும் தந்துள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் நோபல் பரிசினை வென்ற 14 ஆவது பெண் என்ற சிறப்பையும் இவர் பெறுகின்றார்.
முந்தல் பொலிஸ் பிரிவின் மககும்புக்கடவல பகுதியில் 13 வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த மாதம் 8 ஆம் திகதி இடம்பெற்ற துஷ்பிரயோக சம்பவம் தொடர்பில் சிறுமியின் பெற்றோரினால் செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய சந்தேகநபர் நேற்று (08) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் 47 வயதான ரத்மல்கஸ்வெவ பகுதியைச் சேர்ந்த ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு முந்தல் பொலிஸார்
நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.










