மடுமாதா திருத்தலத்தின் பெருவிழாவை முன்னிட்டு இன்றிலிருந்து எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விசேட ரயில் சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் பிரகாரம் நீர்கொழும்பு ரயில் நிலையத்திலிருந்து இன்று காலை 8.10 இற்கு பயணத்தை ஆரம்பித்துள்ள விசேட ரயில், பிற்பகல் 3 மணிக்கு மடு ரயில் நிலையத்தை சென்றடையவுள்ளது.
நீர்கொழும்பு ரயில் நிலையத்திலிருந்து நாளையும் காலை 8.10 இற்கு புறப்படவுள்ள அந்த விசேட ரயில், பிற்பகல் 3 மணிக்கு மடு ரயில் நிலையத்தை சென்றடையவுள்ளது.
நாளை மறுதினம் பிற்பகல் 3.30 இற்கு மடு ரயில் நிலையத்திலிருந்து மீண்டும் பயணத்தை ஆரம்பிக்கவுள்ள விசேட ரயில், இரவு 10.18 இற்கு நீர்கொழும்பை வந்தடையவுள்ளது.
எதிர்வரும் 16 ஆம் திகதி முற்பகல் 10.45 இற்கு மடு ரயில் நிலையத்திலிருந்து புறப்படவுள்ள மற்றுமொரு விசேட ரயில், மாலை 6.51 இற்கு நீர்கொழும்பு ரயில் நிலையத்தை வந்தடையவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த விசேட ரயில் சேவைகளுக்கு மேலதிகமாக நாளாந்தம் கொழும்பு கோட்டை மற்றும் தலைமன்னாருக்கு இடையிலான சேவையில் ஈடுபடும் ரயில்களுடன் மேலதிகமாக பெட்டிகளை இணைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மடு யாத்திரையில் ஈடுபடுகின்றவர்களுக்கு தேவையான குடிநீர் வசதிகள் மற்றும் கழிவறை வசதிகளை மடு ரயில் நிலையத்தில் ஏற்படுத்தியுள்ளதாக ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
இதேவேளை, மன்னார் மடுமாதா திருத்தலத்தின் பெருவிழா எதிர்வரும் 15 ஆம் திகதி கொண்டாடப்படவுள்ளது.
இதனை முன்னிட்டு கடந்த 6 ஆம் திகதி முதல் கொடியேற்றத்துடன் நவநாள் ஆராதனைகள் இடம்பெற்று வருகின்றன.
மன்னார் மறைமாவட்ட ஆயர் தலைமையில் நடைபெறவுள்ள பெருவிழா தினமான எதிர்வரும் 15 ஆம் திகதி காலை கொழும்பு மறைமாவட்ட ஆயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படவுள்ளது.
மடுமாதா திருத்தலத்தின் பெருவிழாவில் பங்கேற்பதற்காக நாடளாவிய ரீதியில் பெருமளவான மக்கள் வருகைத் தந்தவண்ணம் உள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.
அமெரிக்க நீச்சல் சாம்பியனான மைக்கல் பெல்ப்ஸ் சர்வதேச அரங்கிலிருந்து ஓய்வு பெற தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளார்.
ரியோ ஒலிம்பிக் விழாவில் 100 மீற்றர் Butterfly பிரிவில் 2 ஆம் இடத்தை அடைந்த நிலையில் அவர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்.
இந்தப் போட்டியில் சிங்கப்பூரின் 21 வயதுடைய வீரரான ஜோசப் ஸ்கூலின் வெற்றி பெற்றார்.
மைக்கல் பெல்ப்ஸ் 2008 ஆம் ஆண்டு ஜோசப் ஸ்கூலினை சந்தித்துள்ளார்.
அதன் பின் எட்டு வருடங்கள் கடந்த நிலையில் ஸ்கூலின், ஒலிம்பிக் போட்டியின் போது பெல்ப்ஸை வெற்றி கொண்டுள்ளமை பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
ஒலிம்பிக் வரலாற்றில் 22 தங்கம் அடங்கலாக 27 பதக்கங்களை பெல்ப்ஸ் சுவீகரித்துள்ளார்.
விசேட நேர்முகக் கலந்துரையாடலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று கலந்துகொண்டிருந்தார்.
ஊடகவியலாளர் ஷான் விஜேதுங்க இந்த நேர்காணலை நடத்தியதுடன், அமைச்சர் சுசில் பிரேமஜயந்த பிரதி அமைச்சர் அஜித் பீ. பெரேரா ஆகியோரும் இதில் கலந்துகொண்டிருந்தனர்.
இந்த கலந்துரையாடலில் ஜனாதிபதி தெரிவித்ததாவது,
அரசாங்கத்தின் செயல்முறை இந்த நாட்டிலுள்ள அனைவருக்கும் புதிய அனுபவமாகும். பொதுமக்களுக்கும் அரசாங்கத்தை முன்னெடுத்துச் செல்லும் எமக்கும் நாட்டிலுள்ள அனைத்து அரசியல்வாதிகளுக்கும் அரச உத்தியோகத்தர்களுக்கும் வர்த்தகர்களுக்கும் இந்த அரசாங்கம் புதியதொரு அனுபவமாகும். எமது அரசாங்கம் மிகவும் பலம்வாய்ந்ததாகும். ஜனாதிபதி என்ற ரீதியில் சுமார் 62 இலட்சத்து 50 ஆயிரம் வாக்குகள் எனக்கு கிடைத்தன. பாராளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை எமக்குள்ளது. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கையிலும் கடந்த கால அறிக்கைகளிலும் பாராளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை காணப்படுகின்ற பட்சத்தில், முன்னெடுக்கக்கூடிய சில விடயங்களை ஏன் தாமதப்படுத்துகின்றீர்கள் என கேட்கப்பட்டிருந்தது. நாம் பலம்வாய்ந்த அரசாங்கம் என்பதையும் எம்மை அசைக்க முடியாது என்பதையும் பல விடயங்களின் ஊடாக எமக்கு தெளிவாக உணர்த்த முடியும்.



